நாளை யாழ். வருகின்றது சம்பந்தனின் புகழுடல்! 

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அன்னாரின் புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

நாளை யாழ். வருகின்றது சம்பந்தனின் புகழுடல்! 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் நாளை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றது.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அன்னாரின் புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

இதேவேளை, சம்பந்தனின் புகழுடல் நேற்றுக் காலை முதல் இன்று மதியம் வரை பொரளை ஏ.எப். றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அன்னாரது புகழுடலுக்கு நேற்று முதல் இன்று வரை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, சம்பந்தன் படித்த பாடசாலைகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் அன்னாரின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4 மணியளவில் அன்னாரது புகழுடல் தகனக்கிரியைக்காகத் திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.