வடக்கில் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன கனிய வளங்கள் - அமரிக்கத் தூதுவரிடம் ஆளுநர் முறையீடு!

வடக்கில் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன கனிய வளங்கள் - அமரிக்கத் தூதுவரிடம் ஆளுநர் முறையீடு!

வடக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் கனிய வளங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரசியல்வாதிகளால் சூறையாடப்படுகின்றன என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் வடக்கு மாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் சம்பந்தமாகக்   கலந்துரையாடப்பட்டன.
 
காணி விடுவிப்பு தொடர்பான விபரங்களை  வடக்கு ஆளுநரிடம் அமெரிக்கத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

"ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  வடக்கு மாகாணத்தில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள், சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் பாரியளவில் காணப்படுகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்குத் தற்போது உள்ள அரசுடன் கலந்தாலோசித்து சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." - என்று அமெரிக்கத் தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் வடக்கில் உள்ள முக்கிய பிரச்சினையாகவும், இயற்கைப்  பாதுகாப்பாகவும் காணப்படும் கனிய வளங்கள் வடக்கு மாகாணத்தின் பல  பிரதேசங்களிலும் திட்டமிட்டு அரசியல்வாதிகளால்  சூறையாடப்படுகின்றன என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அமெரிக்கத் தூதுவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று தெரிவித்ததுடன் இதற்கு ஆளுநரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்