மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும் : ரணில்

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 27 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும் : ரணில்

தான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து என்ன செய்கின்றீர்கள் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.70 முதல் தாமும் மகிந்தவும் இரு வேறு திசைகளில் பயணித்தவர்கள் எனவும் எப்போதும் எதிரிகளாகவே இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 27 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எனினும் நாட்டின் நெருக்கடியான நிலைமைகளில் மக்களின் நலனுக்காக ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நாட்டை எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டுமென மகிந்த தமக்கு அறிவுரை கூறியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கவிழும் போது மரபு ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சஜித் பிரேமதாச காணாமல்போய்விட்டார்.பொறுப்பினை ஏற்காது ஒளிந்து விட்டார்.எதிர்க்கட்சித் தலைவரின் ஜனநாயக ரீதியான பொறுப்பினை அவர் தட்டிக் கழித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் காலப் பகுதியில் எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் நடக்காத விடயம்  இலங்கையில் நடைபெற்றது, இரண்டு நாட்கள் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ள எவரும் இருக்கவில்லை. பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் யாசகம் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

நானாக இந்தப் பதவியை கேட்கவில்லை, உண்மையில் சஜித் பதவியை ஏற்றுக் கொண்டிருந்தால் நான் அவருக்கு உதவியிருப்பேன். நாடு ஒன்று நெருக்கடியில் விழும் போது பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் எவ்வளவு முரண்பட்டுக்கொண்டாலும் ஒரு கட்சி தோல்வியடைந்த போது எவ்வித முரண்பாடுகளும் இன்றி பதவிகளை ஒப்படைத்து விட்டு வெளியேறிய ஒரே நாடு இந்த ஆசியாவிலேயே  இலங்கை மட்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அடித்துக் கொண்டாலும் மாலை வேளைகளில் சந்திப்போம் பேசுவோம். திருமண நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளோம்.மொட்டு கட்சி மட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர் என  குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் அதனையும் ஏற்றுக் கொண்டு நாட்டை ஆட்சி செய்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என எனக்கு நன்றாகத் தெரியும் அதன் காரணமாகவே இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் அல்ல தேங்காய் எண்ணெய் கூட நாட்டில் இருந்திருக்காது.மொட்டு கட்சியின் ஒத்துழைப்பு இன்றி அமைச்சர்களின் ஒத்துழைப்பு இன்றி தனியாக இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்க முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.