உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் - வெளியான அதிர்ச்சி தகவல்
செப்டம்பர் 17, 2023 அன்று அநுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம், நாடாளுமன்ற உறுப்பினர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
செப்டம்பர் 17, 2023 அன்று அநுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் காரின் பின் பக்க கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் காயம் ஏற்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவிடம் டெய்லி சிலோன் வினவியபோது, “எனது வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. பொலிசில் முறைப்பாடு அளித்ததும் நான் தான். இதுவரைக்கும் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. இறுதித் தீர்மானம் என்னவென்று தெரியவில்லை. நானும் அதையே எதிர்பார்த்து இருக்கிறேன். பார்த்துக்கலாம் என்ன நடக்கும் என்று..” எனத் தெரிவித்திருந்தார்.
Editor