நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

 நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

நடப்பு உலகக் கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இந்தியா தகுதிப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றிருந்தது.

மும்பை - வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெற்றிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 117 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களையும், சுப்மன் கில் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இன்றையப் போட்டியில் சதம் அடித்தன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிகம் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

அவர் ஒரு நாள் போட்டிகளில் 279 இன்னிங்ஸிகளில் துடுப்பபெடுத்தாடி 50 சதங்களை அடித்துள்ளார்.

முன்னதாக இந்த சாதனையை இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பான் சச்சின் டெண்டுல்கர் தன் வசம் வைத்திருந்தார். அவர் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்திருந்தார்.

அந்த சாதனையை விராட் கோலி இன்று முறியடித்தார்.

இதனயைடுத்து 398 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியினர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்று தோல்வியை சந்தித்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல் 134 ஓட்டங்களையும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களையும், க்ளேன் பிலிப்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் மொகமட் சமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நடப்பு உலகக் கிண்ண தொடரில் மூன்றாவது முறையாக அவர் ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த வெற்றியுடன் இந்திய அணி நடப்பு உலகக் கிண்ண தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் மற்றுமொரு அரையிறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டியில் வெற்றிப்பெறும் அணி எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.