பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் ஏவுகணைச் சோதனை நடத்தும் ஈரான்
மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா தனது விமானப் படைகள் மற்றும் கடற்படைகளை குவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது சாத்தியமான இராணுவ நடவடிக்கை குறித்து உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றன. எனினும், இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.
இந்நிலையில், உலகின் மசகு எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் நடைபெறும் முக்கிய கடல்வழியான ஹார்மோஸ் நீரிணை பகுதியில், ஈரான் பிரம்மாண்ட கடற்படைப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த வேளையிலும் ஏவுகணைச் சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, எஃப்-35, எஃப்-16 மற்றும் எஃப்-22 வகை 50க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும், 13 போர்க் கப்பல்களுடன், USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலும் பிராந்தியத்தில் களமிறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், “பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றம் இருந்தாலும், முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை” என்று தெரிவித்தார். ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், இஸ்ஃபஹான் அணுசக்தி வளாகம் மற்றும் நடான்ஸ் அணு தளம் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதை நுழைவாயில்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் தகவல்கள் காட்டுகின்றன.
ஈரான் தனது முக்கிய இராணுவ தளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. டெஹ்ரானிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பார்ச்சின் இராணுவ வளாகத்தில் புதிய கட்டட வசதிக்கு மேல் கொங்கிரீட் கவசம் அமைத்து, அதனை மண்ணால் மூடியிருப்பது அண்மையில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ISIS) வெளியிட்ட தகவலின்படி, ‘தலேகன் 2’ என அழைக்கப்படும் பகுதி தற்போது நிலத்தடி பாதுகாப்பு அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும், இஸ்ஃபஹான் அணுசக்தி வளாகம் மற்றும் நடான்ஸ் அணு தளம் ஆகிய இடங்களிலும் சுரங்கப்பாதை நுழைவாயில்கள் பலப்படுத்தப்பட்டு அல்லது புதைக்கப்பட்டுள்ளன.
பிராந்தியத்தில் போர் அச்சம் அதிகரித்து வருவதால், உலக சந்தைகளும் பதற்றத்துடன் நிலவரத்தை கவனித்து வருகின்றன.
Editor