இலங்கையை போன்று மாறிய நேபாளம்
நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA)அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையை கண்டித்து நேபாளத்தில் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த தடை மீளப் பெறப்பட்ட நிலையில், பிரதமர் பதவி விலகும் வரை ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேபாள அரசியல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேலும் தீவிர மடைந்தது.
இந்த சூழலில் நேபாள பிரதமர் பதவி விலகிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேபாள பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.
அத்துடன் அரசியல் வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பிரதமரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும் இதுபோன்றதொரு அரசியல் சூழ்நிலையே நிலவியது.
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களிடம் தலைகாட்ட முடியாது நாட்டை விட்டு தப்பியோடியிருந்தார்.
அத்துடன், பல அரசியல்வாதிகளின் வீடுகளும் சேதமாக்கப்பட்டன. இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்திலும் அதிகளவாக இளைஞர்கள்தான் கலந்துகொண்டனர்.
இன்று அதேபோன்றதொரு நிலையையே நேபாளமும் முகங்கொடுத்துள்ளது.
Editor