சம்பள உயர்வில் கண்ணாம் பூச்சி ஆட்டம் வேண்டாம் - 5000 ரூபாவை வழங்குங்கள்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இராதாகிருஸ்ணன் வேண்டுகோள்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தீர்வு கிட்டும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பொருட்களின் விலை உயர்வு, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வில் ஏற்பட்டுள்ள நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு போன்ற காரணங்களால் எமது தொழிளலார்களின் சம்பள உயர்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்ற தடை உத்தரவை காரணம் காட்டி சம்பள உயர்வை வழங்க மறுத்து வருகின்றன.
இதன் காரணமாக தொழிலாளர்கள் பெரும் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வருகின்றார்கள்.எனவே அவர்களுடைய விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும். இலங்கையின் பொருளாதார பின்னடைவு காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பானது வானத்தை தொட்டிருக்கின்றது.
இதன் காரணமாக இலங்கையின் கீழ் மட்டத்தில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய அன்றாட உணவு தேவை உட்டபட இன்னும் பல சேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக பல வேலை நிறுத்தம் உட்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்தவிதமான போராட்டமும் இல்லாமல் தங்களுடைய தொழிலை செவ்வனே செய்து வருகின்றார்கள்.
எங்களுடைய தொழிலாளர்களின் வருமானத்தின் மூலமாக ஈரான் நாட்டினுடைய ஒரு தொகுதி கடனையும் தெயிலையை வழங்கி அரசாங்கம் கடனை செலுத்தியுள்ளது.எனவே தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்கள் தங்களை அர்ப்பணித்து இந்த நாட்டிற்காக உழைத்து வருகின்றார்கள்.
ஆனால் அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடி வருகின்றது.வர்த்தமாணி அறிவித்தல் ஜனாதிபதயின் பரிந்துரை என பல விளையாட்டுகள் நடைபெறுகின்றன.ஆனால் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.நீதிமன்றம் இடைக்கால் தடை உத்தரவை வழங்கியுள்ளது.
எனவே அரசாங்கம் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்பு கிடைக்கின்ற வரையில் தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபாவை வழங்க முன்வர வேண்டும்.இதனை தேர்தல் காலத்தில் மாத்திரம் வழங்கிவிட்டு நிறுத்திவிடாமல் வழக்கு நிறைவடையும் வரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களும் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பில் அல்லது வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தால் இந்த நாட்டின் நிலைமை என்னவாகும்?எனவே இதனை அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற அனைவரும் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஏனெனில் அரசாங்கம் இடைக்கால கொடுப்பனவை வழங்குவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அது ஒரு மனிதாபிமான செயற்பாடாக கருதி இதனை செய்ய முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(செய்தி - நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு)
Editor