சஜித் ஏன் வெற்றிபெற வேண்டும்? இராதாகிருஸ்ணன் விளக்கம்

நாட்டின் அனைத்து மக்களையும் அரவணைக்க கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாசவே. இனவாதம் இல்லாது அனைவரையும் ஒரே சமனாக மதிக்ககூடிய தலைவர். எனவே அனைத்து மக்களும் தங்களுடைய வாக்குகளை சஜித் பிரேமதாசாவுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்

சஜித் ஏன் வெற்றிபெற வேண்டும்? இராதாகிருஸ்ணன் விளக்கம்

நாட்டின் அனைத்து மக்களையும் அரவணைக்க கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாசவே. இனவாதம் இல்லாது அனைவரையும் ஒரே சமனாக மதிக்ககூடிய தலைவர். எனவே அனைத்து மக்களும் தங்களுடைய வாக்குகளை சஜித் பிரேமதாசாவுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று கடந்த கொத்மலை மண்டபத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய இராதாகிருஸ்ணன்,

கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் மக்களை பிரித்து வைத்து தங்களுடைய நலன்களுக்காக பிரித்தாளும் கொள்கையுடன் செயற்பட்டார்கள். அதன் காரணமாகவே எங்களுடைய நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.

இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் துரித கதியில் அபிவிருத்தி அடைந்திருப்பதற்கான காரணம் அந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நாட்டின் அபிவிருத்திக்கு அனைவருடைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டதுடன் அனைவரையும் சமனாக மதித்தார்கள்.

ஆனால் இலங்கையில் நடந்தது என்ன? ஒவ்வொரு சமூகத்தையும் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்து வைத்து ஆட்சி செய்தார்கள். இதன் காரணமாக நாட்டு மக்கள் ஒற்றுமை இன்மையுடனும் சந்தேக கண்ணோட்டத்துடனும் செயற்பட்டார்கள்.

இப்படி எங்களுடைய நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல முடியாது.மக்கள் ஒன்றுபட வேண்டும். மக்கள் ஒன்றுபட வேண்டுமாக இருந்தால் ஆட்சியாளர்களை அதனை செய்ய முன்வர வேண்டும்.

அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த கொள்கையை பின்பற்றிய நாடுகள் அனைத்தும் இன்று அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறியிருக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விடயத்தை மிகவும் சரியாக கையாளுகின்றார். அவருடைய ஆட்சியில் திறமையானவர்களுக்கு சரியான பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா இன்று பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

அந்த வகையில் அதனை செய்யக்கூடியவர் சஜித் பிரேமதாச மாத்திரமே. அதனால் நாங்கள் இன்று அவருக்கு எங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றோம். அவர் இந்த நாட்டு மக்கள் அனைவரையும் அரவனைத்து செயற்படக்கூடியவர். அப்படி செய்தால் மாத்திரமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். எங்களுடைய பொருளாதார சவாலை வெற்றி கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தி - நுவரெலியா நிருபர்)